அநுராதபுர சம்பவம் : சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்பு, அச்சத்தில் பதவி விலகும் பெண் அதிகாரிகள்


 அநுராதபுரம் வைத்தியசாலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வசித்து வந்த கல்னேவ பகுதியில் உள்ள வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.


இதன்போது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கைக்குண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியரின் கையடக்கத் தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்காக வீடுகள் சோதனையிடும் போதே இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 


அநுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் உள்ள பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று கிராம அலுவலர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

 இந்நிலையில் தற்போது, பாதுகாப்பு கருதி அனைத்து பெண் கிராம அலுவலர்களும் இன்று முதல் இரவுப் பணியிலிருந்து விலகுவார்கள் என்று இலங்கை கிராம அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.

 
மேலும், பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ள அலுவலகங்களை மூடவும், பாதுகாப்பை உறுதி செய்யும் இடத்திலிருந்து அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் கொழும்பு மாவட்டத் தலைவர் ஷாமலி வத்சலா குலதுங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இரவுப் பணிகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் குறிப்பிட்டார்.