இலங்கையில் தீவிரமடையும் ஐஸ் போதைப் பொருள் வியாபாரம்! அநுரவை காரணம் கூறும் தேரர்

ஐஸ் போதைப்பொருள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலே நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக தம்பர அமில தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். 

பௌத்த தேரர்கள் கூட்டிணைந்து இன்று நடத்திய மாநாட்டின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,

 ஐஸ் போதைப் பொருள் தயாரிப்பதற்கான இரசாயனங்கள் கொண்டு வரப்பட்டமை மற்றும் ஒரு நாளில் நான்கு துப்பாக்கி பிரயோகங்களில் நால்வர் கொல்லப்படுவது போன்றவற்றை நாம் இதற்கு முன்னர் பாரத்ததில்லை.

ஐஸ் போதைப்பொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றால் போதைப் பொருள் பாவனையாளர்கள் பைத்தியம் பிடித்து திரிய வேண்டும். அல்லது போதைப் பொருள் இல்லாத நிலையில் தனது கைகளை வெட்டிக் கொண்ட சம்பவங்கள் நடந்திருக்க வேண்டும்.

மேலும் சிறைச்சாலைகளில் கூட அவ்வாறான சம்பவங்கள் நடக்கவில்லை. அவர்களுக்கு போதைப் பொருள் கிரமமாக கிடைக்கிறது. போதைப் பொருள் விநியோகம் நிறுத்தப்படவில்லை.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களின் பின்னால் அரசியல்வாதிகள் இருப்பதாக கூறுகின்றனர். அப்படியென்றால் இப்போது அதன் செயற்பாடுகள் குறைவடைய வேண்டும். அவ்வாறு நிகழ்ந்ததாக தெரியவில்லை.

மொட்டுக் கட்சியினர் தான் போதைப் பொருள் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கும் அரசாங்கம், தங்களின் கையை விட்டுப்போன உள்ளூராட்சி மன்றங்களின் பலத்தை நிலைநிறுத்த கூட்டு சேர்ந்துள்ளனர்.

அதனால் கடந்த காலங்களில் போதைப் பொருள் விநியோகத்தில் வேறு ஒரு தரப்பு சம்பந்தப்பட்டிருந்தனர். இன்று இவர்கள் அதை கொண்டு செல்வதாகவே எமக்கு தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்