வாழ்க்கைச் செலவை குறைப்பதாகவும், சம்பளத்தை அதிகரிப்பதாகவும், ஜப்பான் வாகனத்தை குறைந்த விலைக்கு வழங்குவதாகவும் கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டது. ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர்,
அரச வருமானம் பற்றி வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கை அடைவதற்கான திட்டங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 2025 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக அமையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு முன்னிலையான அரச அதிகாரிகள் 3 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக குறிப்பிடுகிறார்கள்.
ஜனாதிபதியின் கருத்துக்கும், அரச அதிகாரிகளின் கருத்துக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. அனைத்தும் குழப்பமடைந்துள்ளது. அரசியல் வேறு, பொருளாதாரம் வேறு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் சாபம் என்று விமர்சித்த திட்டங்கள் மற்றும் கொள்கைகளையே அரசாங்கம் தற்போது முன்வைத்துள்ளது. . வரவு செலவுத் திட்டத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் ஏதும் இல்லை.
நாணய நிதியத்தின் கொள்கை வேறு அரச நிதி கொள்கை வேறு. ஆனால் அரசாங்கம் நாணய நிதியத்தின் கொள்கையை அரச நிதி கொள்கையாக குறிப்பிட்டுக் கொள்கிறது.
தேசிய கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதியத்தின் பயனாளர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இவர்களுக்கு நியாயம் வழங்குவதற்கான யோசனைகளை ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தில் முன்வைப்பார் என்று நான் எதிர்பார்த்தேன்.
ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் பயனாளர்கள் தொடர்பில் ஒருவார்த்தைக் கூட குறிப்பிடப்படவில்லை.
இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.
ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் பிரத்தியேக திருத்தமொன்றை முன்வைக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறேன்.
2028 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு அரசமுறை கடன்களை செலுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
அவ்வாறாயின் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும். 2035 ஆம் ஆண்டு வரை இந்த போக்கு காணப்பட வேண்டும்.
2024 ஆம் ஆண்டு காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி கூட இந்த ஆண்டு கிடைக்குமா என்பது சந்தேகத்துக்குரியது.
வரவு செலவுத் திட்டத்தில் ஒருசில சிறந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.
ஊழல் எதிர்ப்புக்கு இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவளிப்போம்.பொருளாதார விவகாரத்தில் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
இதேநேரம் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மக்களும் இவ்வாறு கருத்துக்களை முன்வைத்தனர்.