முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
பாராளுமன்ற ஓய்வூதிய சட்டங்களை இரத்து செய்வதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் செய்வதற்கு இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு முன்வைத்துள்ள "வளமான நாடு அழகான வாழ்வு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 05 வருடங்களுக்குப் பின்னர் வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கும் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.
இவற்றை இரத்துச்செய்யும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டம் மற்றும் 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டங்களை இரத்துச் செய்வதற்காக 02 சட்டமூலங்களைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரவை சமர்ப்பித்த பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய தற்போதுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்கும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும்.
அத்தோடு உத்தியோகபூர்வ இல்லங்கள் உள்ளிட்ட சிறப்புரிமைகளும் நீக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.