பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு அடித்தளமாக செயல்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டம்!

 

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் மனிதாபிமானச் சட்டங்களைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், பயங்கரவாதத்தின் மூல காரணங்களைத் தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமன்றி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் முயற்சிகளில் மனித உரிமைகளைக் கடைப்பிடிப்பதில், ஐக்கிய நாடுகளின் சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இலங்கை வலியுறுத்துகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77வது அமர்வின் ஆறாவது குழுவின் 2வது கூட்டத்தில் பேசிய நிரந்தரப் பிரதிநிதி, அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் இலங்கை கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு மேலதிகமாக, புனர்வாழ்வு மற்றும் கண்ணிவெடி அகற்றும் முயற்சிகளில் இலங்கை வெற்றியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பயங்கரவாத தடுப்புச் சட்டம் இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு அடித்தளமாக செயல்படுகிறது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதைத் தடுப்பதற்கு, நிதிப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பணமோசடிச் சட்டம் உட்பட பல வழிமுறைகளை இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுன்றி பயங்கரவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் பயங்கரவாதத்தின் முக்கிய அங்கங்களாக உள்ளன என்றும் குறிப்பிட்டார்.