களுத்துறையில் மற்றுமொரு கூட்டுப் பாலியல் துஷ்ப்பிரயோக சம்பவம் பதிவு - ஐவர் கைது

12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை 2 ஆண்டுகளாகக் கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஐவர் கைதாகியுள்ளனர்.
 
களுத்துறை - ஹொரண ரெமுன பிரதேசத்தில் வசிக்கும் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவரும், களுத்துறை - தியகம பிரதேசத்தில் வசிக்கும் 3 பேரும், சிறுமியை வீடொன்றில் தடுத்து வைக்க ஆதரவளித்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் திருமணமானவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
நோய்வாய்ப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த சகோதரருடன் குறித்த சிறுமி, வசித்து வந்துள்ளார்.
 
சிறுமியின் வறுமையைப் பயன்படுத்தி, பணம் மற்றும் பிற பொருட்களைக் கொடுத்து சிறுமியை ஏமாற்றி, சுமார் 2 ஆண்டுகளாகப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
கைது செய்யப்பட்ட தனியார் பேருந்து நடத்துனர் சிறுமியை ஒரு மாதத்திற்கு முன்னர் ஹொரணை - ரெமுன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
 
அதன்படி, கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய, களுத்துறை வடக்கு  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணையில், ஹொரணை - ரெமுன பிரதேசத்தில் உள்ள பேருந்து நடத்துனரின் வீட்டில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
 
அதன் பின்னர் சிறுமியிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில் பேருந்து நடத்துனர் சிறுமியை கடத்திச் செல்வதற்கு முன்னர் பல வருடங்களாக பல்வேறு நபர்களால் கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
 
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.