இலங்கையை சேர்ந்த மேலும் 15 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து மேலும் 15 பேர் அகதிகளாக தமிழகத்தை நேற்றிரவு சென்றடைந்துள்ளனர்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக படகு மூலம் தமிழகத்தின் தனுஷ்கோடியை அவர்கள் சென்றடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை மற்றும் காக்கைதீவு பிரதேசங்களை சேர்ந்த 5 குடும்பங்களில் உள்ள 15 பேரே இவ்வாறு புகலிடம் கோரி சென்றுள்ளனர்.

அது தொடர்பில் தகவல் அறிந்த ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு காவல்துறையினர் இவர்களை மீட்டு மண்டபம் கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் போது , தாம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை படகில் ஏறியதாகவும் , இன்று அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியில் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு தஞ்சம் கோரி சென்றவர்களில் 3 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் அவர்களை முகாம்களுக்கு அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.