2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி நிறைவடையும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, செப்டம்பர் 08 ஆம் திகதி வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான சிறப்பு நாளாகக் குறிப்பிடப்படும் என்று அவர் கூறுகியுள்ளார்
அன்றைய தினம் காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 717ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டு முகாமைத்துவ மையத்துக்கு 365 முறைப்பாடுகளும் மாவட்ட முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 352 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள மொத்த முறைப்பாடுகளில் தேர்தல் சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் 693 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேநேரம் திட்டமிடப்பட்ட வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதற்கமைய கூடிய விரைவில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்ட வகையில் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படாமையின் ஊடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பே இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 4 தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.