இலங்கையில் வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை


ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு விடும் போது அந்த வீட்டை வாடகைக்கு எடுப்பவர்கள் என்ன வகையான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறியும் பொறுப்பு உரிமையாளருக்கு இருக்க வேண்டுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

 நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆடம்பர வீடுகளில் தங்கியிருந்து இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 30 சீன பிரஜைகள் நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவ்வாறு கைது செய்யப்பட்ட பலர், வீடுகளை வாடகை அடிப்படையில் வாங்கி மோசடிகளில் ஈடுபட்டுள்ளமையும் மற்றும் பல்வேறு குற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.


மேலும், கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் மற்றும் சீன பிரஜைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என நிஹால் தல்துவா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.