போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து, ரோபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 14 ஆம் லியோ என்ற பெயரையும் ஏற்றார்.
உடல் நலக்குறைவால் கடந்த மாதம் 22- ஆம் திகதி கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் காலமானார்.
புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு வாடிகனில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் இரகசியமாக நடைபெற்றது.
இதற்காக சுமார் 250 கர்தினால்கள் உலகம் முழுவதும் இருந்து வாடிகன் நகருக்கு சென்றனர்.
இருப்பினும் 80 வயதுக்கு உட்பட்ட 133 கர்தினால்கள் மாத்திரமே போப் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதியானவர்களாக இருந்தனர்.
நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில், புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை. அதை குறிக்கும் வகையில் கரும்புகை வெளியேற்றப்பட்டது.
இதையடுத்து ஓய்வு எடுக்கச் சென்ற கர்தினால்கள் நேற்று 2வது முறையாக கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போதும் கரும்புகை வெளியிடப்பட்டதால் புதிய போப் தேர்வு செய்யப்படவில்லை என தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது புதிய போப் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தேவாலய புகைபோக்கியில் இருந்து வெண்புகை வெளியேற்றப்பட்டது.
வெண்புகையை வெளியேறியதும் தேவலாயத்தை சூழ்ந்து இருந்த மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
புதிய போப்பாக 69 வயதான கர்தினால் ரோபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக அமெரிக்கருக்கு போப்பாக வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பிறந்தவரான கர்தினாரல் ரோபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் பெரு நாட்டில் கத்தோலிக்க திருச்சபை பணிகளை மேற்கொண்டவர்.
போப் பதவிக்கு அமெரிக்கர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
புதிய போப் இனி 14 ஆம் லியோ என்ற பெயரால் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.