ஹட்டனில் மூன்று முச்சக்கர வண்டிகளின் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து-மூவர் படுகாயம்!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் அளுத்கம பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று மூன்று முச்சக்கர வண்டிகளின் மீது மோதிவிட்டு, வீட்டின் நுழைவாயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூன்று பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆம்புலன்ஸ் வண்டியின் சாரதி மதுபோதையில் இருந்ததாகவும், அவரை பிரதேச மக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 60 வயதுடைய பெண் ஒருவரும் ஆண் ஒருவரும்  17 வயதுடைய இளைஞர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.மேலும் மதுபோதையில் இருந்த ஆம்புலன்ஸ் சாரதியை கைது செய்த ஹட்டன் பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.