வெளிநாட்டவரை மிரட்டிய கொத்து விற்பனையாளருக்கு நீதிமன்றம் வழங்கிய கடுமையான உத்தரவு


கொழும்பு (Colombo) - புதுக்கடை (Aluthkade) பகுதியில் கொத்து ரொட்டி (Koththu) வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உணவு விற்பனையாளர் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தீர்ப்பை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (17.04.2024) உத்தரவிட்டுள்ளது. 

இந்த சுற்றுலாப்பயணி தான் கொத்து ரொட்டி சாப்பிட விரும்புவதாக கடை உரிமையாளரிடம் கூறி அதன் விலையை கேட்டுள்ளார்.

உடனே, கடை உரிமையாளர் கொத்து ரொட்டியின் விலை 1,900 ருபாய் என கூற அதை கேட்ட சுற்றுலா பயணி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கொத்து ரொட்டியை தயாரிப்பவரிடம் விலை குறித்து கேட்டறிந்த சுற்றுலாப்பயணியை கடை உரிமையாளர், நான் தான் கடையின் உரிமையாளர் எனவும் நான் சொல்வது தான் விலை எனவும் கடும் தொனியில் எச்சரித்துள்ளார்.

மேலும், கடவுள் தன்னை பார்த்து கொண்டிருப்பதாகவும் நான் யாரையும் ஏமாற்றுவதில்லை எனவும் கூறிய கடையின் உரிமையாளர், சுற்றுலாபயணியை கடும் தொனியில் அந்த இடத்திலிருந்து செல்லுமாறு விரட்டியுள்ளார்.

இவை அனைத்தும் குறித்த சுற்றுலாப் பயணியால் காணொளியாக பதிவு செய்யப்பட்டு அவருடைய யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டதையடுத்து, நேற்று உணவகத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.