4 இலட்சம் பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் 70 ஆயிரம் பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்!

ஜனவரி மாதம் முதல் 400,000 பேருக்கு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அவர்களில் 70,000 பேர் மாத்திரமே வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது பெறப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையில் 20% க்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறிருப்பினும் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையும் தற்போது 2400ஆக அதிகரித்துள்ளது.ஒரு நாள் சேவையின் கீழ் ஆயிரம் கடவுச்சீட்டுகளும் சாதாரண சேவையின் கீழ் 800 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு வேறு திகதி வழங்கப்படுவதுடன், அவ்வாறு திகதிகள் வழங்கப்பட்ட சுமார் 600 பேரின் கடவுச்சீட்டுகள் நாளாந்தம் வழங்கப்படுவதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.தற்போது எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் கடந்த வாரத்தைவிட இந்த வாரம் வாடிக்கையாளர் வருகையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.