முருகன் உட்பட நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் சித்திரவதை - சீமான் கடும் கண்டனம்



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் உள்பட 4 பேரையும் சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 7 தமிழர்களில் பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த தீர்ப்பை முன் உதாரணமாக கொண்டு நளினி, முருகன் உட்பட மற்ற 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று முன் தினம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில் நேற்று நளினி, முருகன், சாந்தன் ஆகிய 6 பேரும் சிறையில் இருந்து வெளியேறினர், ஆனால் நளினியின் கணவர் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய நால்வரும் இலங்கை தமிழர் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட முருகன் உட்பட 4 பேரையும் சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கண்டனத்திற்குரியது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

31 ஆண்டுகள் கொடுஞ்சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் சென்று எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாமலும், ஒய்வெடுக்கவும் விடாமல் 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்கள் விடிய விடிய நாற்காலியில் அமர வைத்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நான்கு பேரையும் சிறப்பு முகாம் என்ற பெயரில் உள்ள சித்திரவதை கூடத்தில் அடைக்காமல், அவர்கள் மாற்று இடத்தில் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கும் போது, முதல் நாளே சிறப்பு முகாமில் அடைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.