கட்டுநாயக்கவில் போராட்டம்! கறுப்பு பட்டி அணிந்து பணிகளில் ஈடுபடும் குடிவரவு அதிகாரிகள்

நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் 24 மணித்தியால தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த எதிர்ப்பு நடவடிக்கையானது இன்று(12) முதல் நாளை(13) காலை 9.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் கே.பி. மணவாடு தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அனைத்து அதிகாரிகளும் கறுப்பு பட்டி அணிந்து பணிகளில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் குடிவரவு அதிகாரிகள் அடையாள தொழில் சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாட்டின் அதிகளவான குடிவரவு மற்றும் குடியகல்வு செயற்பாடுகள் இடம்பெறும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமைகளை நிறைவேற்ற போதுமான பணியாளர்கள் இல்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் நாட்டின் நன்மை கருதி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் குடிவரவு அதிகாரிகள் பணியாற்றுவதாக இலங்கை குடிவரவு அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடமை முறைக்கு மேலதிகமாக பொருளாதார நெருக்கடி மற்றும் வேகமாக அதிகரித்து வரும் போக்குவரத்து செலவுகள் மற்றும் சிரமங்கள் இருந்த போதிலும் சிறந்த சேவையை வழங்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்.

இந்நிலையில் சேவையில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு பாரிய சிரமங்களை ஏற்படுத்தும் வகையிலுள்ள கடமை முறையை மாற்றுவதற்கு திணைக்கள நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.