பறிக்கப்பட்ட காணிகள் மீண்டும் விவசாயிகளிடம்: ரணில் வெளியிட்ட தகவல்

பிரித்தானியர் காலத்தில் பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு மீண்டும் அந்த விளைநிலங்கள் முழுமையாக வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(13) வரவு செலவு திட்டம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 20 இலட்சம் குடும்பங்களுக்கு காணி மற்றும் விவசாய நில உரிமைகள் வழங்கப்படவுள்ளதுடன், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிபர் கூறியுள்ளார்.

2024ஆம் ஆண்டு இதனை ஆரம்பித்து சில வருடங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1897 ஆம் ஆண்டு இலங்கை வேஸ்ட்லேண்ட் கட்டளைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது, அதன் கீழ் பிரிட்டிஷ் அரசாங்கம் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் கிராமப்புற நிலங்களை கையகப்படுத்தியது.

அதன் பிறகு, 1935 ஆம் ஆண்டு நில மேம்பாட்டு ஆணையின் கீழ், உரிமத் திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நிலங்கள் பகுதிகளாக வழங்கப்பட்டது.