இன்று முதல் வரி செலுத்தாத எந்தவொரு நிறுவனமும் வரி வலையில் சிக்காமல் ஒளிந்து கொள்ள முடியாது : ஆஷு மாரசிங்க

இன்று (01) முதல் வரி செலுத்தாத எந்தவொரு நிறுவனமும் வரி வலையில் சிக்காமல் ஒளிந்து கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அதிபர் ஆலோசகர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் இடம்பெற்ற மத்திய கூட்டமொன்றில் நேற்று முன் தினம் (30ம் திகதி) கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில்,

“வரி செலுத்துபவர்கள் யார், யார் வரி செலுத்துவதில்லை என்பதை ஆராய்வதற்கான முறைமையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் 2023ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படும் வரி வருமானம் 2850 பில்லியன் ரூபாவாக இருந்தாலும் அதனை 3000 பில்லியனாக தாண்டும் நிலையில் உள்ளது.

அதிபரின் திறமையான பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த நிலைமை எட்டப்பட்டதோடு, மூன்று இலட்சம் கோடியை வசூலித்தமை பெரும் சாதனை ஆகும்.

அத்துடன், வரிக் கோப்புகளை மறைக்கும் திட்டத்தில் 27 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதோடு, அந்த நிறுவனங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.” என வலியுறுத்தியுள்ளார்.