பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களை இணைத்துக்கொள்வது மட்டுப்படுத்தப்பட்டது!

பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்களை இணைத்துக்கொள்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள பாடநெறிகளுக்கு இலங்கை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பல இலங்கை மாணவர்கள் தமது பாடநெறிக் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தத் தவறியுள்ளதாகவும் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், குறித்த மாணவர்கள் பல்கலைக்கழங்களிலிருந்து நீக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்வதுடன், அவர்களின் விசா குறித்து குடிவரவு அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் பல்கலைக்கழகமும் மாணவர்களும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும் என சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே விண்ணப்பம் ஏற்கப்பட்ட மாணவர்கள் மீதமுள்ள படிப்புக் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என்பது குறித்த தெளிவான திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன், 55 சதவீதமான முன்பணமாக செலுத்திய மாணவர்களும் மீதமுள்ள தொகையை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிகக்ப்படுகின்றது.

இந்தநிலையில் நிர்ணயிக்கப்பட்ட முழு பாடக் கட்டணத்தையும் ஒரே நேரத்தில் செலுத்தும் இலங்கை மாணவர்களே இனிவரும் காலங்களில் தங்கள் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பாடநெறிகளுக்கு இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.