ஜோன்ஸ்டனை கைது செய்ய நடவடிக்கை – குருநாகல் மற்றும் கொழும்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்காக இரண்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குருநாகல் மற்றும் கொழும்புக்கு சென்றுள்ளனர்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி கோட்ட கோ கம மற்றும் மைனா கோ கம பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

குறித்த விவகாரத்தில் சந்தேகநபர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட நால்வரை சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று சந்தேகநபர்களாக பெயரிட்டிருந்தனர்.

இந்தநிலையிலேயே ஜோன்ஸ்டனை கைது செய்யும் நடவடிக்கையில் குருநாகல் மற்றும் கொழும்பில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.