இரவுவேளை அழைத்துச் சென்று வசந்த முதலிகேவை கொல்ல முயற்சி என குற்றச்சாட்டு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை அரசாங்கம் கொலை செய்ய முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் மற்றும் ஒருவர் 45 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.அந்த விடயங்கள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கின்றன.

ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால் சில இடங்களைக் காட்டுவதற்காக வசந்த முதலிகேவை இரவு நேரத்தில் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்வதுதான்.

அழைத்துச்செல்லும் போது தப்பிச் செல்ல முயற்சித்ததாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கும். அவரை தடுப்பதற்காக காவல் துறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார் எனவும் பின்னர் அறிவிக்கப்படும்.

ஆகையினால் விசாரணைகளை இரவு வேளைகளில் அல்லாது பகலில் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேட்டுக்கொண்டார்.