ஹதரலியத்த - ரம்புக்கனை வீதியில் 12வது மைல்கல் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹதரலியத்த திசை நோக்கி பயணித்த லொறி ஒன்று, முச்சக்கர வண்டியுடன் மோதி நேற்று மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
லொறியின் சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், மோட்டார் சைக்கிள் மற்றும் கெப் வண்டியில் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி மற்றும் இரண்டு உதவியாளர்கள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், கெப் வண்டியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் காயமடைந்து ஹதரலியத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் 52 மற்றும் 63 வயதான லொறியின் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
லொறியின் உதவியாளர்கள் இருவரும், கெப் வண்டியின் சாரதியும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சடலங்கள் தற்போது ஹதரலியத்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,ஹதரலியத்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை லிந்துலை, மெராயா ஊவகெல்லே தோட்டத்தின் மேல் பிரிவில், அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் பின் இருக்கையில் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் முதுகுத் தண்டுவடத்தில் காயம் அடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டி சாரதி மற்றும் பின்னால் பயணித்த அவரது நண்பர்கள் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாகவும், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் தெரியவந்துள்ளது.