மன்னாரில் கோர விபத்து - மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தர் பலி

 தலைமன்னார் பிரதான வீதியின் பருத்திப்பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் தலைமன்னார் ஊர் மனைக்கு பயணித்துக்கொண்டிருந்த போது வெளி மாவட்டத்திலிருந்து சுற்றுலா வந்த ஹயஸ் ரக வாகனம் தலைமன்னார் ஊர்மனையிலிருந்து மன்னாருக்கு வந்த போது இரண்டு வாகனங்களும் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் தலைமன்னார் ஊர்மனையைச் சேர்ந்த இரண்டுமாதக் குழந்தையின் தந்தையான லோறன்ஸ் மனோகரன் நிசாந்தன் (வயது- 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தலைமன்னார் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.