புத்தளத்தில் கோர விபத்து : ஸ்தலத்திலே பலியான இராணுவ அதிகாரி

புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைக்கிடையிலான பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை பாலாவி கற்பிட்டி பிரதான வீதியின் கரம்பைப் பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைப் பகுதி நோக்கிச் சென்ற லொறி, வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு பின்னர் டீமோ பட்டா லொறியையும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டீமோ பட்டாவில் சென்றவர்கள் அதிஷ்டவசமாக உயிர்த் தப்பியுள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் இராணுவ விஷேட படையணியின் சார்ஜண்ட் மேஜராக கடமையாற்றி ஓய்வுப்பெற்ற பாலாவி பொத்துவில்லு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய அனுர மங்கள் குமார என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், விபத்துக்கு காரணமான லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.