நாயை காப்பாற்ற தன்னுயிரை மாய்த்த குடும்ப பெண்: இறந்த பின் செய்த கொடை!



பொலநறுவையில் நாய் ஒன்றின் உயிரைக்காப்பாற்ற சென்ற பெண் ஒருவர் தொடரூந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தொடருந்தில் மோதுண்டமையினால் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை, கதுருவெல பகுதியை சேர்ந்த இரேஷா பிரசாங்கனி என்ற 45 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு இந்த தொடருந்து விபத்தில் சிக்கியுள்ளார்.

கடந்த 17ஆம் திகதி காலை 8.30 மணியளவில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் கதுருவெலயில் உள்ள அவரது குடியிருப்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

அயல் வீட்டவரின் வளர்ப்பு நாய் வீட்டின் பின்புறம் உள்ள தொடருந்து தண்டவாளத்தை நோக்கி ஓடுவதைக் கண்ட பெண், அப்போது தொடருந்து சத்தம் கேட்டு ரயில் பாதைக்கு ஓடி நாயைக் காப்பாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்தகைய நோயாளியின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளை தானமாக அளித்து மேலும் மூன்று நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று நோயாளியின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கமைய, உறவினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை மற்றும் கண்டி பொது வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் மற்றுமொரு நோயாளிக்கு மாற்றுவதற்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.