தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

ஹொரண - வீதியகொட பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்குறித்த பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் வீட்டின் பக்கத்துவீட்டு நபரே இந்த குற்றத்தை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சந்தேகநபர் வீட்டிற்குள் நுழைந்து வெளியேறிய காணொளி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது.

சந்தேகநபரின் காணியை 60 இலட்சம் ரூபாவிற்கு சில காலத்திற்கு முன்னர் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை 80 இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்ய சந்தேகநபர், ஒருவரை கண்டுபிடித்துள்ளார்.

இதன்படி குறித்த கொள்வனவாளர் காணியை கொள்வனவு செய்வதை உறுதி செய்து, காணிக்கு சொந்தமான சந்தேக நபருக்கு 3 இலட்சம் ரூபாவை முன்பணமாக வழங்கியுள்ளார்.

இதன்பின்னர், 80 இலட்சம் ரூபாய்க்கு விற்க திட்டமிட்டிருந்த நிலத்தை, 60 இலட்சம் ரூபாய்க்கு வாங்கப் போவதாக, உயிரிழந்த பெண்  காணியை வாங்கியவரிடம் கூறியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான காணி கொள்வனவாளர், காணி உரிமையாளரை சந்தித்து அவர் மீது குற்றம்சாட்டி நிலத்துக்கான முன்பணத்தை மீளப்பெற்றுள்ளார்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த காணியின் உரிமையாளர் குறித்த பெண்ணின்  வீட்டிற்கு செ்ன்று தீ வைத்து எரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத்தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத்தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.