பசில் ஒரு செல்லாக்காசு : ரணிலுடன் பேசி பயன் இல்லை என குற்றச்சாட்டு


பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது அரசியல் வட்டாரத்தில் செல்லுபடியாகாத நாணயமாக திகழும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்புக்களை முன்னெடுப்பது அர்த்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பது தொடர்பான இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் அண்மையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க, அவரது அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு செயல்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஆலோசனைகளுக்கமைய ரணில் விக்ரமசிங்க சில தீர்மானங்களை மேற்கொள்வார் எனவும் இந்த பின்னணியில்இ இலங்கை மக்களின் நலன் கருதி தாம் சில அரசியல் ரீதியான தீர்வுகளை மேற்கொள்ள நேரிடுமெனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதேநேரம்  ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று (22) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், குறித்த கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.