படகு மூலம் பிரித்தானியாவிற்கு சென்ற யாழ் இளைஞன் உயிரிழப்பு!

பிரான்ஸில் இருந்து லண்டனுக்கு சட்டவிரோதமான முறையில் பயணித்த இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று முன் தினம் (05) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞரும் இன்னும் சில நபர்களும் இணைந்து லண்டனுக்கு சட்டவிரோதமாக படகில் பயணித்துக் கொண்டிருந்தபோது படகு புயலில் சிக்கி கடலில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக கடலுக்குள் விழுந்த குறித்த நபரை படகில் இருந்த ஏனையவர்கள் மீட்ட போதும் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக இளைஞர்கள் பலர் பிரான்ஸில் இருந்து லண்டன் நோக்கி படகு மூலம் புலம்பெயர்ந்து வருவது அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது.