இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாக சந்தேக நபரை தேடிச் சென்ற போது கடற்கரை அருகே வீட்டின் பின்புறம் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 74 லட்சம் மதிப்புள்ள சுறா துடுப்புகள், சுக்கு, செருப்பு அடங்கிய 23 சாக்கு பண்டல்களை மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர்கள் தனிப்பிரிவு போலீசார் நேற்று பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த தினைக்குளம் கடற்கரையில் கடந்த சனிக்கிழமை(17) இரவு ராமநாதபுரம் சின்ன கடை பகுதியை சேர்ந்த செய்யது அப்துல்லா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
உடலை கைப்பற்றி பொலிசார் நடத்திய விசாரணையில் செய்யது அப்துல்லா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து கொலை செய்த நபர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் செய்யது அப்துல்லா கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் கடற்கரை அருகே வசித்து வரும் ஆசிப் என்பவரின் வீட்டிற்கு திருப்புல்லாணி பொலிஸ் நிலைய சிறப்பு பிரிவு பொலீசார் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு விசாரணைக்காக சென்றனர்.
ஆனால் ஆசிப் வீடு பூட்டப் பட்டிருந்ததால் வீட்டின் பின்புறம் உள்ள கடற்கரை வழியாக வீட்டிற்குள் சென்ற பொலீசார் வீட்டின் பின்புறம் இருந்த குடிசையை சோதனை செய்த போது இலங்கைக்கு கடத்துவதற்காக கடத்தல் பொருட்கள் அடங்கிய 23 சாக்கு மூட்டைகள் பதுக்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து முட்டைகளை எடுத்து போலீசார் சோதனை செய்தபோது அதில் 15 மூட்டைகளில் சுறா துடுப்புகள் 4 மூட்டைகளில் சுக்கு 4 மூட்டைகளில் செருப்புகள் இருந்துள்ளன.
23 மூட்டைகளையும் பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீசார் அதனை மண்டபம் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.