1200 கோடி ரூபா போதைப்பொருளுடன் இலங்கை வந்த கப்பல்! பரபரப்பு பின்னணி


சுமார் 200 கிலோ ஹெரோயினுடன் ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்று, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கப்பலானது நேற்று முன்தினம் (06) கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த 200 kg ஹெரோயினின் பெறுமதி சுமார் 1,200 கோடி எனவும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட கப்பலுடன் ஈரான் நாட்டின் ஆறு பேரை இந்திய படையினர், கேரளாவின் மட்டஞ்சேரி துறைமுகத்துக்கு அழைத்து வந்துள்ளதாக இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக துணை இயக்குநர் சஞ்சய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இலங்கையின் கப்பல் ஒன்றுக்கு மேலும் சரக்குகளை வழங்குவதற்காக குறித்த கப்பல் இந்திய கடற்பரப்புக்கு புறப்பட்டபோதே இந்திய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இலங்கைக் கப்பலை அடையாளம் கண்டு இடைமறிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.