இளைஞனை ஆக்ரோஷமாக எட்டி உதைத்த இராணுவ உயர் அதிகாரி - காணொளியாக எடுத்த இளைஞனுக்கு கொலை மிரட்டல்!

எரிபொருள் வரிசையில் இருந்த இளைஞரை இராணுவ அதிகாரி ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் நேற்றைய தினம் அதிகளவில் பகிரப்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணையை சிறிலங்க இராணுவம் ஆரம்பித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தாக்குதலை நடத்திய இராணுவ அதிகாரி இராணுவத்தின் லெப்டினன்ட் கேர்னல் தர அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக ஐவர் அடங்கிய விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா இராணுவம்  தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குருநாகல் யக்கஹபிட்டிய பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர், எரிபொருள் வரிசையில் நின்றிருந்த இளைஞரை எட்டி உதைத்ததை பதிவு செய்த இளைஞனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த இளைஞன் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக காணொளியை பதிவு செய்த இளைஞர் இணைய ஊடகம் ஒன்றில் நடந்த விவாதத்தில் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் இன்றைய தினம் சிறிலங்கா இராணுவம், அறிக்கையொன்றை  வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

“குடிபோதையில் இருக்கும் பொதுமக்களின் வன்முறையான நடத்தையை முன்வைக்காமல்,  இராணுவ அதிகாரியை கேலி செய்வதற்காக” இராணுவ உறுப்பினரின் ஆக்ரோஷமான தன்மைக்கு ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் உடனடியாக ஐந்து பேர் கொண்ட விசாரணை குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.