யாழில் பத்திரிகை அலுவலகத்தினுள் புகுந்து கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது...!

யாழிலுள்ள பத்திரிகை அலுவலகத்தினுள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத  நபர் ஒருவர் அங்கு அட்டூழியத்தில் ஈடுபட்டதுடன் கொலை அச்சுறுத்தலும் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதையில் இருந்த அந்த நபர், நேற்று இரவு 8 மணியளவில் பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்ததுடன், அங்கிருந்த பணியாளர்களுடனும், காவலாளியுடனும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியவாறு ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரிய பீடத்தினர், ஏனைய பணியாளர்களுக்குக் கொலை அச்சுறுத்தலையும் விடுத்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டு, தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான் சிறையில் இருந்து வெளிவந்ததும் பத்திரிகை அலுவலக பணியாளர்களை நிச்சயம் பழிவாங்குவேன் என்று தெரிவித்த அவர். 'தனியாகத்தானே போய் வருகின்றீர்கள்' என்று ஆசிரிய பீடத்தினருக்கு உயிர் அச்சுறுத்தலும் விடுத்தார்.

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அவரைக் கைதுசெய்தனர். 

அவருக்கு எதிராகப் பொலிஸாரிடம் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.