குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருவி

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பைக் கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இக் கருவியானது பெண் குரங்களின் கருப்பையில் கரு உருவாவதை தடுக்கும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கருவி, ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது.

இச்சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது என்றும்,

இதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என்றும் பேராசிரியர் அசோக தங்கொல்ல குறிப்பிட்டுள்ளார்.