இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்..! வெளியாகிய அறிவிப்பு


நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தீர்மானித்துள்ளார்.

அதற்கான அனுமதிப்பத்திரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போது இந்த முறைமையை தயாரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைகளுக்கு வீட்டுப் பணியாளர்களாக அனுப்பப்படும் தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கையாள்வதற்கான முறைமையொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், வீட்டுப் பணியாளர்களை விசாரிப்பதற்கான முறைமை இல்லாமை குறித்தும் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.

இதன்படி, உள்ளூர், வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களை விசாரிப்பதற்கான அமைப்பை தயாரிக்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்நாட்டில் வேலை செய்யும் வீட்டு வேலையாட்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும்,அவர்களின் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகள் குறித்து ஒரு சிறப்பு அமைப்பை தயாரிக்குமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.