இரண்டு வாரங்களுக்குள் புதிய மாற்றம் - உடனடித் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!

நாடாளுமன்றத்தில் நாளைய தினம் 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தாக்கல் செய்யப்படவுள்ளது.அந்த திருத்தச் சட்டத்திற்கு அமைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நீடிக்கும்.

ஆகவே நாடாளுமன்றத்தின் இந்த பதவிக்காலத்திற்குள் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும்.

அவ்வாறு பிரச்சினைகளைத் தீர்த்த பின்னர் தேர்தலுக்கு செல்வோம் என மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

தற்போது பதவியேற்றுள்ள அமைச்சரவை தற்காலிகமானது. ஆகவே இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சர்வக்கட்சி அரசாங்கமும் புதிய அமைச்சரவையும் பதவியேற்கும்.

அதனடிப்படையில், சர்வக்கட்சி அரசாங்கத்தில் பங்கேற்குமாறு அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைத்த பின்னர், அனைத்து கட்சிகளும் உள்ளடங்கும் வகையில் அமைச்சரவை உருவாக்கப்படும். அவ்வாற உருவாகும் சர்வக்கட்சி அரசாங்கம் இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர். ஆனால் உடனடியாக தேர்தலுக்கு செல்லும் வாய்ப்பில்லை எனவும் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தில் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் நாளை 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. 22வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நான்கரை ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.

ஆனால் நாடாளுமன்றம், கலைக்குமாறு கோரினால், கலைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.