ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை பெற்றுகொடுக்க தீவிர முயற்சியில் இறங்கிய பிக்குகள் குழு


தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி, பல்வேறு அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள் குழுவொன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு விஜயம் செய்து உண்மைகளை தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தேசிய சங்க கூட்டமைப்பு, ராவணா சக்தி, சிங்கள அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 30) முதலில் அஸ்கிரி மகா விகாரைக்கு சென்று அஸ்கிரிய கட்சியின் தலைவர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன் தேரருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன் பின்னர் மல்வத்து மகா விகாரைக்கு சென்ற பிக்குகள் குழுவினர் மல்வத்து மகா விகாரையின் மஹா தலைவர் திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரருக்கு அறிவித்தனர்.

இங்கு, கடந்த வெசாக் நோன்மதி தினத்தன்று, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு பௌத்த உயர் பீடங்கள் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பியதாகவும், ஆனால் அது தொடர்பில் நல்ல பதில் கிடைக்கவில்லை எனவும் இரு பீடாதிபதிகளும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இது குறித்து மீண்டும் ஒருமுறை விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட இராவணா சக்தி அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியிடம் கலந்துரையாடியது போலவே ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி ஆகிய இரு தரப்பினருடன் இது தொடர்பில் கலந்துரையாடினோம்.

  அவர்களின் முக்கிய மத அமைப்பான ஜம்மியத்துல் உலமாவிடம் இது குறித்து கலந்துரையாடுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, அந்த அமைப்புடன் கலந்துரையாட உள்ளதாக அவர் கூறினார்.