பொலநறுவையில் பெண் அதிகாரி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!

பொலநறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியான பெண்ணொருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக லங்காபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம்  இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்ணின் வீட்டிலேயே கொலை நடந்துள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

பொலநறுவை தல்பொத்த என்ற இடத்தில் வசித்து வந்த 42 வயதான எம்.எல்.யமுனா பத்மினி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் நடக்கும் போது பெண்ணின் கணவரும், பிள்ளைகளும் வீட்டிலேயே இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்ணை கொலை செய்தது யார்? எந்த காரணத்திற்காக கொலை செய்தனர் என்பதை கண்டறிய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலநறுவை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஓஷான் ஹேவாவிதாரணவின் உத்தரவின் பேரில் சிறப்பு காவல்துறை குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.