சஜித் அணிக்குள் வெடித்த மோதல்...! கபீர் ஹாசிம் - ராஜித மோதல், பொன்சேகா கட்சியிலிருந்து நீக்கம்


ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் மாநாடு தொடர்பில் ராஜித சேனாரத்ன முன்வைத்துள்ள குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால், நான் எனது பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்வேன் என பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம்(12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,


கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் மாநாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்டே இளைஞர்களை ஒன்று திரட்டினோம்.

இளைஞர்களுக்கு சாப்பாட்டுப் பொதிகள் வழங்கப்பட்டே மாவனல்லை தொகுதியில் இருந்து இளைஞர் மாநாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் என ராஜித சேனாரத்ன பொய்யான கருத்துக்களை வெளியிட்டமையை வன்மையாகக் கண்டிக்கிறேன்

அண்மையில் எனது வீட்டில் நடந்த கூட்டம்  தொடர்பிலும் திரிபுபடுத்தப்பட்ட சில கருத்துக்களை ராஜித சேனாரத்ன வெளியிட்டிருந்தார்.

அந்த கூற்றை அன்று நான் சரி செய்ய முற்படவில்லை.

கடந்த மாதம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எனது வீட்டில் கூடி கலந்துரையாடினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கான வியூகங்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் குறைபாடுகள், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றை வெளிப்படையாகப் பேசினோம்.

இவற்றையே கலந்துரையாடினோம். ஆனால் ராஜித சேனாரத்ன இதனை திரிவுபடுத்தி கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

தங்களின் மனசாட்சியின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து, சஜித் பிரேமதாசவின் செய்தியை அறிந்து கொள்வதற்காகவே இளைஞர்கள் மாநாட்டிற்கு வருகை தந்தனர்.

சோற்றுப் பொதிக்காகவே இளைஞர்கள் கூட்டத்திற்கு வருகை தந்ததாக ராஜித சேனாரத்ன கூறியிருந்தால் அது தவறு. இன்றைய இளைஞர் சமூகம் இவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்படவில்லை.

ராஜித சேனாரத்னவின் இந்தக் கூற்றால் கேகாலை மாவட்ட இளைஞர்கள் மன வேதனையடைந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

இதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி சாா்ந்த அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சரத் பொன்சேகாவை நீக்கத் திா்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பாராளுமன்ற குழுக் கூட்டம் உள்ளிட்ட கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.

மேலும், பாராளுமன்ற உறுப்பினா் சரத் பொன்சேக்காவின் அண்மைக்கால நடவடிக்கைகள் கட்சியின் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், இவ்விடயம் தொடா்பாக நன்கு ஆராய்ந்த பின்னரே இத்தீா்மானம் எடுக்கப்பட்டதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அத்துடன்,  அவருக்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றில் வேட்பு மனு வழங்குவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.