கிளிநொச்சியில் முதியவரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணமோசடி: வங்கி உத்தியோகத்தர் கைது

கிளிநொச்சியில் முதியவர் ஒருவரை ஏமாற்றி சுமார் ஆறு இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம் (23.01.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் வங்கி உத்தியோகத்தரும் அவரது கணவருமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் வங்கி உத்தியோகத்தரும் அவரது கணவனும் இணைந்து முதியவர் ஒருவரிடம் மூன்று இலட்சத்து ஐம்பாயிரம் மற்றும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் என ஆறு இலட்சம் ரூபா பணத்தினை மோசடியாகப் பெற்று குறித்த முதியவரை ஏமாற்றியுள்ளத்துடன் அதற்கு பதிலாக மறுக்கப்பட்ட காசோலையினையும் வழங்கியுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட முதியவரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளனர்.

மேலும் குறித்த வங்கி ஊழியரும் அவரது கணவரும் ஏற்கனவே பலரை ஏமாற்றி மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.