மாணவியின் நிர்வாணப்படங்களை வெளியிட்ட 25 வயது இளைஞன்..! காவல்துறையினரால் கைது


பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவிற்கு கடந்த புதன்கிழமை (22) நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்த தனது மகளின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கல்முனை மாநகர சபை பெண் உறுப்பினர் முறைப்பாடு ஒன்றினை வழங்கி இருந்தார்.

இதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் குறித்த பாடசாலை மாணவியை காதலிப்பதாக சந்தேகிக்கப்பட்ட திருக்கோவில் பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை மாணவியின் ஒத்துழைப்புடன் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணையின் பின்னர் கைது செய்தனர்.

இதன் போது 2 வருடங்களாக காதலிப்பதாக ஏமாற்றி, அக்கால கட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்துகுறித்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதுடன் அதனை காணொளியாக தனது கைத்தொலைபேசியில் சேமித்து வைத்துள்ளார்.

பின்னர் 2 வருடங்களாக தொடர்ந்த காதல் பின்னர் இடைநடுவில் மாணவியின் பெற்றோர் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.இதனால் குறித்த இளைஞன் விரக்தியுற்று மாணவியின் பெற்றொருக்கு பல்வேறு அழுத்தங்களை தொலைபேசி ஊடாக வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் திடிரென சமூக வலைத்தளங்களில் அம்மாணவியுடன் காதல் தொடர்பில் இருந்த காலங்களில் எடுக்கப்பட்ட பாலியல் வன்புணர்வு காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி இருந்தன.

இதனை அடுத்து அம்மாணவியின் தாயார் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட காவல்துறையினர் குறித்த இளைஞனை கைது செய்து வியாழக்கிழமை(23) கல்முனை நீதிமன்றில் முன்னிலைபடுத்தியதை அடுத்து எதிர்வரும் மார்ச் மாதம் 8 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் காவல்துறை தகவல் தொழிநுட்ப பிரிவினருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.