சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ள 68 கைதிகள் - ஜனாதிபதி மன்னிப்பில் நடந்தது என்ன?

முன்னாள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் நிதி மோசடி குற்றவாளியை சட்டவிரோதமாக விடுவிக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.



குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உபுல்தெனிய, வழக்கமான நடைமுறைகளை மீறி, நீதி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வெசாக் மன்னிப்புப் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத கைதியான அதுல திலகரத்னவை விடுவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


விடுவிக்கப்பட்ட நபர் மே 2 ஆம் திகதி அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை உத்தரவினை எதிர்கொண்டிருந்தார்.


மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் சுதந்திர தினத்தின் போது சட்டத்தை மீறி இதேபோன்ற விடுதலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மன்றுக்கு எடுத்துக்காட்டியுள்ளார்.


முதற்கட்ட விசாரணைகளில் 57 கைதிகள் 2024 டிசம்பரில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகவும், 2025 சுதந்திர தினத்தன்று மேலும் 11 பேர் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை இலங்கையில் தேசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
 
பொது மன்னிப்பின் கீழ் கைதிகளை விடுவிப்பதில் அண்மையில் கண்டறியப்பட்ட முறைகேடுகளைக் கருத்திற் கொண்டு இந்த செயற்பாடு நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 
தேசிய சுதந்திர தினம், விசாக பூரணை மற்றும் கிறிஸ்மஸ் போன்ற நிகழ்வுகளின் போது, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றமை வழமையாகும்.
 
மேலும் இதற்காக, சிறை அதிகாரிகளால் விடுவிக்கப்பட வேண்டிய கைதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோலை நீதி அமைச்சு உருவாக்குகிறது.
 
 
எனினும், எதிர்காலத்தில் கைதிகளை விடுவிப்பதற்கான புதிய அளவுகோல்களை உருவாக்க ஒரு குழுவை நியமிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.


இதனிடையே வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்களின் பட்டியலைப் பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
 
 
அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றின் மூலம் இதனைக் கோரியுள்ளார்.

 
இந்த விடயத்தில் ஜனாதிபதி வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
 
 
வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 388 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
 
 
இதில், தண்டனை விதிக்கப்பட்டு அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எம். அதுல திலகரத்ன விடுவிக்கப்பட்டமையானது, அங்கீகரிக்கப்படாத விடுதலை என்பது கண்டறியப்பட்டதை அடுத்தே எதிர்க்கட்சித் தலைவரின் இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.