தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : சந்தேகநபரொருவர் கைது

மாத்தறை - பெலியத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த குற்றத்திற்கு தலைமை தாங்கிய  54 வயதுடைய சமன் குமார என்பவரும் இவர்கள் பயன்படுத்திய PEJERO MITSUBISHI ஜீப்பையும் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர் குற்றத்தை மேற்கொள்ள வந்த வாகனத்தின் சாரதியாகவே இந்த குற்றத்தை திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

கடந்த 22ஆம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை - கஹவத்தை வெளியேறும் பகுதிக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம் சென்ற வீதிகளை காவல்துறையினர் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.

தாக்குதலை நடத்திய பின்னர் சந்தேகநபர்கள், பெலியத்த, ஹக்மன, கம்புருபிட்டிய மற்றும் அக்குருஸ்ஸ ஊடாக பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அக்குருஸ்ஸ - பங்கம பகுதியிலும் யக்கலமுல்ல பகுதியிலும் அவர்கள் சுற்றித்திரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவர் கம்புருப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் ஜீப்பில் இருந்து இறங்கும் சிசிடிவி காணொளி காட்சிகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் தமது முதுகில் ஒரு பையை சுமந்து சென்றுள்ளதுடன் அவர் பயணித்த இடங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ள காணொளி காட்சிகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

அத்துடன் ஜீப் ரக வாகனத்தில் இருந்து வெளியே வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஒரே நேரத்தில் 2 தோட்டாக்கள் வெளியேறும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.