யாழில் சிறுமியைச் சீரழித்த 2 தமிழ் காவல்துறையினர் - வெளிவரும் அதிர்ச்சி பின்னணி


யாழ். பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சிறுமியை இரு தமிழ் காவல்துறையினர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

அத்துடன், சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தும் காணொளியை எடுத்து, அதனை வைத்து மிரட்டி தொடர்ச்சியாக இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிவாரணம் வழங்குவதாகத் தெரிவித்து 17 வயதான சிறுமியை இரண்டு தமிழ் காவல்துறையினர் அழைத்துச் சென்று யாரும் இல்லாத வீட்டில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதனைக் காணொளியாக பதிவு செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அதனைக் காண்பித்து அச்சுறுத்தி தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை குறித்த சிறுமி(தற்போது 19 வயது) திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார். இதனையடுத்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையிலும், வழங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலும் அவர் இரண்டு வருடங்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

அத்தோடு, சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய காணொளியை பாடசாலை மாணவர்களுக்கும் சந்தேகநபர்கள் அனுப்பினர் எனவும், பாடசாலை மாணவர்களும் அச்சிறுமியை பாலியல் வன்புணர்க்கு உட்படுத்த முயன்றனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.