ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் : மேலும் இருவர் கைது

சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கைது செய்யப்பட்டவர்கள் 38 மற்றும் 40 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி ஜனக ரத்நாயக்க கிருலப்பனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்படி, சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் தலைமறைவாவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த மற்றும் உதவி செய்த இரண்டு சந்தேக நபர்கள் தம்புள்ளை பல்வெஹர பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.