உயர்தர  மாணவன் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கம்பளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
கம்பளை வீதி உலப்பனையைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வேலைக்குச் செல்லும் தனது தாயாரை வணங்கி, பின்னர் அறைக்குச் சென்ற குறித்த மாணவன், அறையின் கதவைப் பூட்டிவிட்டு  துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை ஹெத்கால பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கணிதப்பிரிவில் பயின்று வந்துள்ளார்.
இவரது தாய் ஆசிரியை எனவும், தந்தை வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது தனியார் நிறுவன ஊழியராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சகோதரன் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், சகோதரி குருநாகல் போதனா வைத்தியசாலையில் பயிற்சி வைத்தியராகவும் கடமையாற்றுகின்றனர்.
இந்நிலையில் தந்தை மறைத்து வைத்திந்த அவரது  துப்பாக்கியை கண்டு பிடித்த மாணவன்,  துப்பாக்கியால் சுட்டுத் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மாணவன், க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 08 ஏ, B சித்தியுடன், உயர்தரத்தில் கல்வி கற்பதற்காக கண்டியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இணைந்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு முன்னதாகவே உயர்தரத்துக்குத் தயாராகிய இவர், பரீட்சை எழுத முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாணவன் பெரும்பாலும் இணையவழியில் பாடங்களைச் கற்றுள்ளதோடு, கணினி மற்றும் கைத்தொலைபேசியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை ஹெத்கால பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            