போதைக்கு அடிமையாகிய 17 வயது மகன்..! திருத்தித் தருமாறு காவல் நிலையத்தில் ஒப்படைப்பு - யாழில் சம்பவம்


யாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் தாயொருவர் கடந்த இரண்டு வருடங்களாக போதை பொருளுக்கு அடிமையாகி உள்ள தனது மகனை திருத்தித் தருமாறு கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.

கோப்பாய் காவல் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஒப்படைக்கப்பட்ட இளைஞன் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய பின்னர் வீட்டில் இருப்பதாகவும் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நேரத்துக்கு ஒழுங்காக சாப்பிடுவதில்லை இரவில் தூக்கமின்மை போன்ற பல இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்தார்.

தனது மகனின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்த தாய் தனது மகனை  கோப்பாய் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியிடம் திருத்தி தருமாறு ஒப்படைத்துள்ளார்.

காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த இளைஞன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.