இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர் கடன்

இலங்கை அரசாங்கம் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே இக்கடன் வசதியைப் பெற்றுள்ளது.

இது தொடர்பான நிதி ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்திடப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் நிதித் துறையின் பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த இந்தத் திட்டம் பங்களிக்கும் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

செயல்திறன் மிக்க வைப்பு காப்புறுதித் திட்டத்திற்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க இலங்கை வைப்பு காப்புறுதித் திட்டத்தின் நிதி மற்றும் நிறுவனத் திறனை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.