13,200 லீற்றர் பெட்ரோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி தடம் புரண்டது !

கொழும்பிலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விபத்து ஏற்படும் போது தாங்கியில் 13,200 லீற்றர் பெட்ரோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இதன்போது கசிந்து வீணாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பில் குருநாகல் தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புப் பிரிவினரின் பெரும் முயற்சியின் பின்னர் எரிபொரு தாங்கி மீண்டும் வீதிக்கு கொண்டுவரப்பட்டது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மழையுடனான காலநிலை காரணமாக வீதியில் இருந்து வழுக்கிச் சென்று விபத்து இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் குருநாகல் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.