பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து : 12 பேர் பலி

பாகிஸ்தானின் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலோசிஸ்தான் பகுதியில் ஹார்னாய் மாவட்டத்தில் நேற்று இரவு (19) இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்பு நடவடிக்கைகள் இன்று (20) பிற்பகல் நிறைவடைந்ததாக பலோசிஸ்தான் மாகாண சுரங்க கண்காணிப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றபோது சுரங்கத்துக்குள் 20 ஊழியர்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

சுரங்கத்திற்குள் சுமார் 240 மீற்றர் (800 அடி) ஆழத்தில் நிலத்தடியில் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

அவர்களில் 8 பேர் காப்பாற்றப்பட்டதுடன் 12 பேர் உயிரிழந்தனர் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.