சீரற்ற காலநிலையால் 11 பேர் உயிரிழப்பு : நாளை சூறாவளியாக உருவாகலாம் என எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9688 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


மேலும் இந்த சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இதேநேரம் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1246 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேநேரம் இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 34 குடும்பங்களைச் சேர்ந்த 121 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேல், மற்றும் வடமேல் மாகாணங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநேரம் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக உருவாகலாமென, இலங்கை மற்றும் இந்திய வளிமண்டலவியல் திணைக்களங்கள் மற்றும் வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு தாழமுக்கம் உருவாகியுள்ளது. இந்த தாழமுக்கம் வடகிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவடைந்து, நாளை (25) அது சூறாவளியாக உருவாகலாமெனவும், அந்த நிலையங்கள் தெரிவித்துள்ளன.

இதேநேரம் நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்கள் தென்மேற்கு பருவமழை காரணமாக, தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலும், சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தோடு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதேவேளை, கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் குறித்த கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை எவ்வித நடவடிக்கைகளும் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று மன்னாரிலிருந்து கல்பிட்டி வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே குறித்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.