சாரதி வேலைக்கு சென்று பன்றி வளர்த்த 106 இலங்கையர்கள் - லிதுவேனியாவில் சிக்கித் தவித்த இருவர் நாடு திரும்பினர்


லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகள் வேலைக்காகச் சென்ற 106 இலங்கையர்களில் இரண்டு இலங்கையர்கள் இன்று   காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றில் 12 இலட்சம் ரூபாவை செலுத்தி 106 இலங்கையர்கள் லிதுவேனியாவிற்கு வேலைக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் அந்த நாட்டிற்குச் சென்ற பிறகு இருவருக்கு மட்டும் கனரக வாகன சாரதிகள் வேலை வழங்கப்பட்டுள்ளது.

மற்றையவர்கள் பன்றிக் கூடுகளில் வேலைக்கு அனுப்பப்பட்டதாகவும் நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் தெரிவித்தார்.  

அத்துடன் இலங்கையிலிருந்து சென்ற அனைவரும் கனரக வாகனங்களை செலுத்துவதற்கு  தகுதியானவர்கள் என்பதுடன்,  பன்றி வளர்ப்பு வேலை  அவர்களுக்குக் கடினமானதாக இருந்ததாக அவர்  தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த குடியிருப்பு விசாக்களை, லிதுவேனியா அரசு ரத்து  செய்துள்ளது.

இதனால் ஒரு நாளைக்கு 10 யூரோக்கள் செலவழித்து இவர்கள் தங்குமிடத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, இவர்கள் இருவர் மாத்திரமே இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

லிதுவேனியாவிலிருந்து இலங்கை வர இவர்கள் இதுவரை சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், இவர்களுடைய வீடுகளை அடகு வைத்து இந்தப் பணத்தைச் செலவிட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.